வருங்கால வைப்பு நிதி முறைகேடு: கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர், "சஸ்பெண்ட்'

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு செய்தது தொடர்பாக, கூடுதல் உதவி தொடக்கல்வி அலுவலர் திரு.வெ.சுகுமார், அலுவலக கண்காணிப்பாளர் திரு.சத்யவாணிமுத்து, எழுத்தர் திரு.ராதாகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர், மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த சிவநாட்சியார் ஆரம்பப்பள்ளி  தலைமை ஆசிரியர் திரு.ஆதிநாராயணனும் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.


சில மாதங்களுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூரில், தலைமை ஆசிரியை ஒருவர், தன் மகள் திருமணத்திற்காக , தன் வருங்கால வைப்பு நிதியிலிருந்து, 4.35 லட்சம் ரூபாயை எடுக்க விண்ணப்பித்தார். பணம் கிடைப்பது தாமதமானது. 
விசாரித்ததில், அவரது பணம், கருவூலத்திலிருந்து வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை. விசாரணையில், வேறு நபரின் பெயரில் அப்பணம் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.
 துறை ரீதியான விசாரணையில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி பணம், முறைகேடாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் கணக்கில் வரவு வைக்கப்படாமல், வேறு நபரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, மீண்டும் கடன் கேட்ட ஆசிரியரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இம்மோசடி தொடர்பாக, மேற்கண்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார கிளைக்கு நன்றி! ஆசிரியர் நலன் காக்கும் கேடயம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

Popular Posts