உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க சில திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு:

சென்னை, ஆக.26: உண்மையான சமச்ச்சீர் கல்வி கிடைக்க அரசு சில திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.அதன்படி, 65 துவக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், 710 நடு நிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப் படுவதாகத் தெரிவித்தார். மேலும், 9735 பட்டதாரி ஆசிரியர்கள், 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த ஆண்டில் நிரப்பப் படவுள்ளதாகத் தெரிவித்தார். பள்ளிகளில் தொழிற்கல்வி, உடற்கல்வி உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 16549 பகுதி நேர ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிவித்தார். இதனால் 6,7,8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர். மேலும், பள்ளிகளில் கழிப்பறைகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள் என சீரமைப்பு மேற்கொள்வதற்கு, ரூ.1082.71 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார் முதல்வர்.நிலை உயர்த்தப்பட்ட மேல் நிலைப்பள்ளிகளில் 3187 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.எல்லா மாணவ மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் ஒரே மாதிரியாக அளிக்கப்படுவது போல், எல்லாருக்கும் ஒரே மாதிரியாக புத்தகப் பைகள் கொடுக்கப்படவுள்ளன. கணக்கு உபகரணப் பெட்டி (ஜியாமெண்ட்ரி பாக்ஸ்), வண்ண பென்சில்கள், புவியியல் வரைபடம் ஆகியவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.மேலும், ஆசிரியர் அல்லாத பணியிடங்களாக, துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட 5000 பணியிடங்கள் புதிதாக நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.ஒரே வருடத்தில் புத்தகத்தை மூன்று பருவங்களுக்கு மூன்று தொகுப்பாகப் பிரித்து, முப்பருவ முறை கொண்டுவரப்படும் என்றார் முதல்வர். இதன்மூலம் பள்ளிக் குழந்தைகள் புத்தகச் சுமையைக் குறைக்க முடியும் என்றும், எளிதாகக் கையாள இயலும் என்றும் தெரிவித்தார்.பத்து, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் பட்டியல், இனி, மாணவர்களின் புகைப்படம் ஒட்டப்பட்டு, தொழில்நுட்பம் சார் ரகசியக் குறியீடு இருக்கும் வகையில் வழங்கப்படவுள்ளது.மாணவர்களின் சிந்தனைத் திறனை ஊக்குவிக்க 7 முதல் 15 வயது வரையுள்ள மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார் முதல்வர்.அரசு தொடக்க மற்றும் உயர்நிலை, நடுநிலை, மேல்நிலைப் பள்ளி வகுப்பு கற்றல் கற்பித்தலை மேம்படுத்த, தகவல் தொழில்நுட்ப திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது, பள்ளி ஆசிரியர்களுக்கான திட்டமாக செயல்படுத்தப்படும். இதன்மூலம் ஆசிரியர்களுக்கான தனிப் பயிற்சி திட்டம் உருவாக்கப்படும்.அனைத்து மாணவர்களுக்கும் தரமான கணினி மூலமான நவீனக் கல்வி கிடைக்க, செயற்கைக் கோள் மூலம் பாடங்களைப் பார்க்க வசதி ஏற்படுத்தப்படும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.




சுதந்திரம் எனது பிறப்புரிமை

indian-independence-day-graphics.gif

August 2, 2011 Slideshow

August 2, 2011 Slideshow
மெட்ரிகுலேஷன் என்ற பெயரை நீக்க மாட்டோம்- மெட்ரிக் பள்ளிகள் பிடிவாதம்


சென்னை: மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டன் என்ற பெயர்களை விட்டுத் தர மாட்டோம். அவற்றை நீக்குமாறு அரசு கூறினால் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடருவோம் என்று தமிழ்நாடு நர்சரி, நடுநிலைப்பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார்.




இதுகுறித்து நந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தரமற்ற சமச்சீர் கல்வித் திட்டத்தைத்தான் நாங்கள் எதிர்த்து வந்தோம். தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் உத்தரவுகளை ஏற்று சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளோம்.



அதேசமயம், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தனியாரிடமே சமச்சீர் கல்வி புத்தகங்களை வாங்குவோம். இதுதொடர்பாக ஏற்கனவே அரசு அனுமதித்துள்ளது. தமிழ் புத்தகங்களை மட்டும் அரசிடமிருந்து பெறுவோம்.



எங்களது பள்ளிகளில் மெட்ரிகுலேஷன், ஓரியண்டன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் என்ற பெயர்களை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். அவைதான் எங்களது உயிர்நாடி. அவற்றை விட மாட்டோம். அவற்றை நீக்குமாறு அரசு கூறினால் நாங்கள் வழக்கு தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.

STFI LETTER

25 காரணங்கள் என்னென்ன? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்!

புதுடெல்லி : சமச்சீர் கல்வியை 10 நாளில் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. ‘அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்கக்கூடாது’ என்று தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்தது. பல தரப்பினரும் நடத்திய அமைதி போராட்டத்துக்கு இதன் மூலம் வெற்றி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், அனைத்து பள்ளிகளிலும் ஒரே பாடதிட்டம் அமலாகிறது. முதல்வர் ஜெயலலிதாவும், சமச்சீர் கல்வி தீர்ப்பை உடனே ஏற்பதாக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.




முந்தைய திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியை நிறுத்த சட்ட திருத்தம் கொண்டு வந்து, பழைய பாடத்திட்டத்தை அமல்படுத்த அதிமுக அரசு முயற்சித்தது. இதை எதிர்த்து 10 பேர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 18ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், ‘உடனடியாக பாடபுத்தகங்களை வழங்க ஆரம்பிக்க வேண்டும். வரும் 22ம் தேதிக்குள் அந்த பணியை முடிக்க வேண்டும்’ என்று தீர்ப்பு கூறியது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தையும் ரத்து செய்தது.



ஆனால், அதை ஏற்க மறுத்த அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டிலும் அரசு கோரிய தடையை வழங்க முடியாது என்றும், ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனுவின் மீது 26ம் தேதி முதல் விசாரணை நடந்து முடிந்தது. இதற்கிடையே பழைய பாடத்திட்டத்தின் படி புத்தகங்கள் அச்சிடும் பணியை அரசு ஒரு புறம் மேற்கொண்டு வந்தது.



ஆனால், நீதிமன்றம் கூறிய தீர்ப்பின்படி நடந்து கொள்ளாத தமிழக அரசு, பாடப்புத்தகங்களை வழங்காமலே காலம் கடத்தி வந்தது. உயர் நீதிமன்றம் சொன்னபடி ஜூலை 22ம் தேதிக்குள்ளும் கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் தெரிவித்தபடி ஆகஸ்ட் 2ம் தேதிக்குள்ளும் புத்தகம் வழங்கவில்லை. ஆனால், ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் கொடுத்து விடுவோம் என்று தமிழக அரசு தெரிவித்தது. அதன்படியும் புத்தகம் கொடுக்கவில்லை. இதற்கிடையே பழைய பாடப்புத்தகங்களை அச்சிட்டு மாவட்டங்களில் இருப்பு வைக்கும் பணியை மட்டுமே பள்ளிக் கல்வித் துறை செய்து வந்தது.



இதற்காக ஸீ200 கோடி செலவாகியுள்ளது. 6ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட புத்தகங்கள் என்பதால் அதை ஆசிரியர்கள் நடத்தி வந்தனர். மற்ற வகுப்புகளுக்கு இதுவரை பாடப்புத்தகங்கள் வழங்காமல் உள்ளதால், தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தகம் வழங்க வேண்டும் என்று பள்ளிகளில் முற்றுகையிட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



ஆனால் உச்ச நீதிமன்றத்தில் இதுவரை நடந்த விசாரணையின்போது, ‘இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது, மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதனால் பழைய பாடப்புத்தகங்களை வழங்க உள்ளது’ என்று அரசு தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டது. மேலும் பாடப்புத்தகங்களை 10ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று அடுத்த கட்ட கெடுவையும் உச்ச நீதிமன்றம் வழங்கியது. இருப்பினும் தமிழக அரசு புத்தகங்களை வழங்காமல் இருந்தது.



இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாஞ்சால், சவுகான், தீபக்வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கில் பரபரப்பான தீர்ப்பை வழங்கினர். 3 நீதிபதிகளும் சமச்சீர் கல்வி குறித்து ஒருமித்த கருத்தையே தெரிவித்து இருந்தனர். நேற்று காலை 10.34 மணி அளவில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சவுகான் தீர்ப்பை வாசித்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பு மற்றும் பொது மக்கள் தரப்பில் கூறப்பட்ட கருத்துகளில் 25 காரணங்களை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.



மேலும், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. வரும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறியுள்ளனர். இது தவிர தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவையும் தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.



மெட்ரிக். பள்ளிகள் அத்தியாயம் முடிகிறது



தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் முதல் முறையாக 1974ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் ஆலமரம் போல பரந்து, விரிந்து நகரங்கள் முதல் கிராமங்கள் வரை என்று 16 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்போது 37 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வி என்று அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மெட்ரிக் பள்ளிகளின் அத்தியாயம் முடிந்து, பொதுக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்குகின்றனர்.



தனியார் பள்ளிகள் பெயர் மாறும்



சமச்சீர் கல்வி முறையை கொண்டு வரும் போதே தற்போது நடைமுறையில் இருந்து வந்த 4 கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து பொதுக் கல்வி வாரியத்தை அரசு உருவாக்கியது. இதற்காக ஒரு சட்டத்தையும் கொண்டுவந்தது. இந்த சட்டத்தின்படி இனிமேல் தமிழகத்தில் ஒரே கல்வி வாரியம் தான் செயல்படும். 4 கல்வி முறைகள் இருக்காது. மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக்குலேஷன், ஓ.எஸ்.எல்.சி, ஆங்கிலோ இந்தியன் என இதுவரை இருந்து வந்த கல்வி முறைகளுக்கு இனிமேல் தனித்தனி இயக்குநர்கள் இருக்க வாய்ப்பில்லை.



தனியார் பள்ளிகளும், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் என்றெல்லாம் பெயர்களில் இயங்காது. பெயர்கள் பொதுவாக இருக்கும். எனவே மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி பள்ளிகள் இனிமேல் பொதுக்கல்வி வாரியத்தின் கீழ் வந்துவிடும். சமச்சீர் கல்வி அனைத்து வகுப்புகளுக்கும் வந்துவிட்டால் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வு நடக்கும் காலங்களில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்தான் கேள்வித்தாளை முடிவு செய்வார்கள்.



25 காரணங்கள் என்னென்ன? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்



சமச்சீர் கல்வி வழக்கில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுகான் ஆகியோர் நேற்று தீர்ப்பு அளித்தனர் . நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்: சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று 25 காரணங்களை கூறிய தீர்ப்பு அளிக்கிறோம்.

அவை வருமாறு:



1. தமிழகத்தில் தரமான கல்வி சமமான கல்வி தர கடந்த 2010ம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் கல்வி கற்கும் குழந்தைகள் மத்தியில் பொருளாதார சமூக கலாச்சார வேறுபாடுகள் இருக்க கூடாது என்ற அடிப்படையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது.



2. கடந்த 2010ம் 2011ம் கல்வி ஆண்டில் 1ம் மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் பாடம் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011&2012 கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று கடந்த அரசு அறிவிப்பு வெளியிட்டது. மீண்டும் புதிய அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழகஅரசு கூறியதை ஏற்க முடியாது.



3. சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள் கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில கருத்துக்களை கூறியுள்ளது. இதை கடந்த அரசு பின்பற்றவில்லை. எனவே சமச்சீர் கல்வியை தள்ளிவைத்தோம். இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம் என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.



4. கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் சில மாற்றங்களை செய்ய சட்டத்தில் தனியாக வழியுள்ளது. இதற்காக நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பிக்க முடியும். இதற்காக புதிய சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான்.



5. கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்த முடியாத காரணத்தினால் தான் தமிழக அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது என்பதை ஏற்க முடியாது.



6. புதிய அரசு கடந்த மே 16ம் தேதி பதவி ஏற்றது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் 17 மற்றும் 18ம் தேதி சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் , தனியார் அமைப்புகள் அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தன. இந்த கோரிக்கைகளை கொடுத்த அமைப்புகள் தான் ஏற்கனவே சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. இதை அரசு பரிசீலணைக்கு எடுத்து இருக்க கூடாது.



7.தமிழக அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பே கடந்த மே மாதம் 21ம் தேதி பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அடிக்க தமிழக அரசு டெண்டர் கொடுத்தது. இதன் மூலம் சமச்சீர் கல்வியை தள்ளிவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசியில்ரீதியான உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. அதன்அடிப்படையில் தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.



8. தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையிலான 9 பேர் அடங்கிய நிபுணர் குழு சமச்சீர் கல்வி பாட திட்டத்தை சரியாக ஆய்வு செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.



9. சமச்சீர் கல்வியை தள்ளிவைப்பதாக அரசு அறிவித்ததை எதிர்த்து பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது. இதை அடுத்து தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.



10. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து தமிழக அரசு முதலில் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.. உச்ச நீதிமன்றம் அரசு மனுவை விசாரித்து, சமச்சீர் கல்வியை ஆராய்ந்து பார்க்க 9 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால் கமிட்டி சரியாக செயல்படவில்லை.



11. கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி தரமானது என்று கூறிவிட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சமச்சீர் கல்வி தரமற்றது என்று அதே கல்வித்துறை செயலாளர் கூறியது வியப்பாக உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்ய கூடாது என்று கல்வித்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். அவரே இந்த ஆண்டு உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சமச்சீர் கல்வி சரியில்லை,என்றும் தரமற்றது என்றும் அதனால் சட்டத்திருத்தம் அவசியம் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். இது தவறானது. இப்படி பட்டவரை தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவில் உறுப்பினராக சேர்த்தது தவறானது. எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.



12. தற்போதைய கல்வித்துறை செயலாளர் கடந்த ஆண்டு 8ம் வகுப்பு , 9ம் வகுப்பு, 10 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடபுத்தகங்களை அச்சடி ஒப்புதல் வழங்கினார். இந்த புத்தகங்களுக்கும் விலை நிர்ணயம் செய்ததும் அவர் தான் என்று தெளிவாக தெரிகிறது.



13. தமிழக அரசின் நிபுணர்கள் குழு சில குறைபாடுகளை தான் கூறியுள்ளது தவிர சமச்சீர் கல்வி வேண்டாம் என்று கூறவில்லை.



14. சமச்சீர் கல்வி சட்டம் 2010ம் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் வெளி வந்ததால் மற்ற வகுப்புகளுக்கும் சட்டப்படி இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறுகிறோம்.



15. பாடத்திட்டத்தில் தரம் இருக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் 2011ம் ஆண்டு கொண்டு வந்தாலும் அதன் உள்நோக்கம் சரியாக இல்லை. இந்த சட்டத்திருத்தம் சமச்சீர் கல்வியை திரும்ப பெறுவது போல உள்ளது. எனவே இதை ரத்து செய்கிறோம்.



16. ஒரு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகு அதை திருத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி திருத்த சட்டம் கொண்டு வந்தால் அது செல்லாதாகிவிடும்.



17. சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்க தனியார் நிறுவனங்களுக்கு கடந்த அரசு டெண்டர் கொடுத்தது. புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது. இதுதெரிந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழைய பாடபுத்தகங்களை அச்சடிக்க டெண்டர் கொடுத்தது. இது தவறானது. இதை அனுமதிக்க முடியாது. இது உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.



18. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த எந்த உத்தரவையும் தமிழக அரசு பின்பற்றவில்லை.



19. கடந்த 2005ம் ஆண்டின் தேசிய பாடதிட்ட வரைவை கடந்த சரியாக பின்பற்றியது. அதை சரியாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.



20. சமச்சீர் பாடத்திட்டத்தில் ஒரு சில தவறுகள் உள்ளது என்றும் அதை சரி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சிறு தவறுக்களுக்காக ஒரு சட்டத்தையே திருத்த வேண்டிய அவசியம் இல்லை.



21. ஆரம்ப பள்ளி சமச்சீர் கல்வி பாட திட்டத்தில் முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி தலைவரின் படங்கள், கவிதைகள், தத்துவம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. அது இளம் மாணவர்களை கவரும் வகையில் உள்ளது , அவர்கள் மனதில் அரசியல் சாயம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று தமிழக அரசு கூறியதால் அந்த பகுதிகளை நீக்கலாம் என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இதை அரசு ஏற்று இருக்க வேண்டும். இதை அரசு ஏற்காதது தவறானது. அதற்கு மாறாக சமச்சீர் கல்வியை காலவரையற்ற அளவில் தள்ளிவைத்துள்ளது.



22. தமிழக அரசின் கல்வித்துறை இணைய தளத்தில் 10 வகுப்பு பாடங்கள் வெளியிடப்பட்டதை தெரிந்து கொண்ட மாணவர்கள் அவற்றை நகல் எடுத்து படித்து வந்துள்ளனர். எனவே சமச்சீர் கல்வியை ரத்து செய்ய முடியாது. 2010 &2011 கல்வி ஆண்டிலும் சமச்சீர் பாடத்திட்டம் தான் இருக்கும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.அந்த நம்பிக்கையை அரசு பாழ்படித்துள்ளது.



23. சமச்சீர் கல்வியை மேலும் வலுபடுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை அரசு அமுல்படுத்திருக்க வேண்டும்.



24. ஒரு சில பள்ளிகள் தங்களுக்கு விரும்பமான பாட திட்டங்களை தேர்வு செய்யலாம் என்ற காரணத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதை ஏற்க முடியாது.



25. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் சமச்சீர் கல்வி சட்டத்தை செல்லும் என்று கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அப்படி இருக்கும்போது தற்போது 2011ம் ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது.

சமச்சீர் கல்வி திட்டத்தை அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமுல்படுத்த வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்த, சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது. அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான். சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. மாணவர்களுக்கு உடனடியாக பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு செல்லும்.

ஒவ்வொரு கட்சியும் அரசு மாறும் போது மாணவர்கள் பாதிக்கும் அளவு நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது. தமிழக அரசின் நடவடிக்கை மாணவர்களின் அடிப்படை அதிகாரத்தை பறிப்பதாகும். மாணவர்களுக்கு பாதிப்பதாக உள்ளது. அரசியில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் என்ற காரணத்தை காட்டி மாணவர்கள் படிப்பு பாழாக்க கூடாது. பாழக்கியது தவறு. அரசு கொள்கை முடிவு எடுத்தாலும் அதை ஏற்க முடியாது. குழந்தைகள் எதிர்காலம் பாதிக்காதவகையில் அரசு செயல்பட வேண்டும். அரசியில் உள்நோக்கத்துடன் அரசு நடவடிக்கை எடுத்ததாக தெளிவாக தெரிகிறது. உயர்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழக அரசு மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்கிறோம்.



ஊதிய முரண்பாடுகள் களையப்படும் - பட்ஜெட் உரையில் அறிவிப்பு :

•அரசுப் பணியாளர்களின் ஒத்துழைப்பும் ,ஈடுபாடும் பல்வேறு நல திட்டப்பணிகளையும் ,வளர்ச்சி பணிகளையும் வெற்றிகரமாக செயல்படுவதற்கு இன்றியமையாதவை என இந்த அரசு கருதுகிறது. இந்த திருத்த ஊதியவரவு செலவு மதிப்பீட்டில் 27,091 கோடி ரூபாய் பணியாளர்கள் ஊதிய செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.


•ஊதிய முரண்பாடுகளை களைய முந்தைய அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்திய பின்பும் முரண்பாடுகள் தொடர்பாக அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால் ,இந்த அரசு

முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

•இவ்வாறு 2011-2012 பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது. .
TNPTF க்கு கிடைத்த வெற்றி:

சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு : மாணவர்கள் மகிழ்ச்சி!
சென்னை : சமச்சீர் கல்வி தீர்ப்பை அடுத்து பல இடங்களில் மாணவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர். மேலும் சமச்சீர் கல்வி தீர்ப்பால் பெற்றோர்கள், மாணவர்கள் ஆரவாரம் செய்தனர்.

சென்னை : சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன ஆணையிடுகிறதோ அதன்படி இந்த மாநில அரசு நடக்கும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா நேற்று சட்டப்பேரவையில் கூறியிருந்தார். இந்நிலையில் சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை தமிழக அரசு ஏற்குமா என்று சற்று நேரத்தில் தெரியும். இதுகுறித்து சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஜெயலலிதா என்ன பேசுவார் என்று தமிழக மக்களும், மாணவர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியானது. மேலும் உயர்நீதிமன்ற நீதிமன்றத்தில் தலையிடமுடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

NEW G.O RTI

சமச்சீர்கல்வி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக அரசு காத்திருக்கிறது- ஜெயலலிதா :
சென்னை: சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக தமிழக அரசு காத்திருக்கிறது. தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அரசு அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.




சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல்செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை முடித்து விட்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.



தீர்ப்பு நாளை அல்லது நாளை மறு நாள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று சட்டசபையில் பட்ஜெட் மீது நடந்த விவாதத்தின்போது சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.



அதற்குக் குறுக்கிட்டுப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா,



சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். தீர்ப்பு வந்தவுடன் அதை அமல்படுத்த தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார்

TNPTF VIRUDHUNAGAR

TNPTF VIRUDHUNAGAR
தகவல் உரிமை பெறும் சட்டத்தில் தகவல் கொடுக்காத அதிகாரிக்கு அபராதம்:

வள்ளியூர் : தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் முறையான தகவல் கொடுக்காத தொடக்க கல்வி இயக்குநருக்கு 25 ஆயிரம் அபராதம் விதித்து தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு வழங்கியுள்ளது.வள்ளியூரில் செயல்பட்டு வரும் நான்குநேரி, ராதாபுரம் தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் தலைவர் விஜயகுமார் மாநில தொடக்க கல்வி இயக்குநரத்தில் உள்ள பொது தகவல் வழங்கும் அலுவலருக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பணி குறித்தும், அவர்களின் பதவி உயர்வு, பணியிறக்கம் குறித்த தகவல்களையும் கேட்டு தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி மனு அனுப்பி கேட்டிருந்தார்.ஆனால் அவருக்கு மனு மீது உரிய தகவல் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மனுதாரர் பலதடவை நினைவூட்டும் கடிதம் அனுப்பியும் மாநில தொடக்க கல்வி இயக்குநரகத்தில் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த விஜயகுமார் இதுகுறித்து தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு புகார் செய்தார்.அதன்படி தமிழ்நாடு தகவல் ஆணையம் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் மாநில தொடக்க கல்வி இயக்குநரகத்தின் பொது தகவல் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (நிர்வாகம்) சுதர்சனன் மனுதாரருக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் தராததாலும், பல நினைவூட்டும் கடிதம் அனுப்பிய பிறகு காலதாமதமாக தகவல் வழங்கியதாலும் இவ்வாணையம் முடிவு செய்து தகவல் உரிமை பெறும் சட்டத்தின்படி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.அபராத தொகையை ஆகஸ்ட் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து அதன் விபரத்தை ஆணையத்திற்கு வரும் செப்டம்பர் 10ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு மாநில தொடக்க கல்வி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.




ஆகஸ்ட்-2  இயக்க நாள்
விருதுநகர் திருச்சுழி ஒன்றியத்தில் ஆகஸ்ட்-2 இயக்க நாளை முன்னிட்டு கொடியேற்று விழா ம.ரெட்டியபட்டியில் நடைபெற்றது. திருமதி.கொ.இந்திரா அவர்கள் தலைமையில் திருமதி.ஜெ.மனோன்மணி அவர்கள் இயக்ககொடியை ஏற்றி வைத்தார். CITU  அமைப்பாளர் திரு. செல்வராஜ் அவர்கள் வாழ்த்தி பேசினார். வட்டார செயலாளர் திரு.கூ.கருத்திருமன் அவர்கள் மற்றும் மாவட்ட துணை  செயலாளர் திரு.த.இர.செல்வகணேசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினர். வட்டார பொருளாளர் திரு.கா.அந்தோனி அவர்கள் நன்றி கூறினார்.











சாஸ்திரா பிஎட் தமிழக அரசு ஏற்பு

PAY ROLL

Popular Posts