அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி! நீதித்துறை ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு

அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, கிருஷ்ணன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழுவை அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அரசாணையில் 89 அறிவிப்புகளை வெளியிட்டது.
 இதற்கு பின்பும் அரசு ஊழியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படவில்லை என ஆசிரியர்கள், பட்டு வளர்ச்சி ஆய்வாளர்கள், ஊர்புற நூலகர்கள், சாலை ஆய்வாளர்கள், புள்ளியல் துறை அலுவலர்கள் முறையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நீதித்துறையில் சிராஸ்தார், ஏஏஓ, மேலாளர்களுக்கான கிரேடு ஊதியம் ரூ.4,900 லிருந்து ரூ.5,100, நகல் எடுப்போர், பரிசோதகர்களுக்கு ரூ.2,000லிருந்து ரூ.2,400, உதவியாளர், பெஞ்ச் கிளார்க் அலுவலர்களுக்கு ரூ.2,400லிருந்து ரூ.2,800, ரெக்கார்டு கிளார்க், அசிஸ்டென்ட் ரூ.2,000லிருந்து ரூ.2,400 என உயர்த்தி நிதித்துறை ஒப்புதலுடன் துறை ரீதியான அரசாணை நவ. 8ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு தொடர்பான அரசாணைகள் எப்போதும் நிதித்துறை சார்பில் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், தற்போது நிதித்துறை சார்பில் துறை ரீதியான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் திரு.சங்கர் கணேஷ் அவர்கள் கூறுகையில், ‘’இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் நீதித்துறைக்கு தற்போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அரசு இடைநிலை ஆசிரியர்களை வஞ்சித்து வருதாக கருது கிறோம்’’ என்றார்.அரசு ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ நீதித்துறை நெருக்குதலின் பேரில் அந்தத் துறைக்கு மட்டும் ஊதிய உயர்வுக்கான அரசாணை துறை ரீதியாக வெளியிட்டுள்ளனர். அனைத்து தரப்பில் உள்ள குறைகளை களைய வேண்டும்’’ என்றார்.

Popular Posts