பணி நியமனத்திற்காக காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியர்கள்

பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 2,000 தையல், ஓவியம் உள்ளிட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த ஜூனில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு நடந்தது. 5,000 பேர் கலந்துகொண்டனர். ஆனால், ஏழு மாதமாகியும் பணி உத்தரவு வழங்கப்படாததால், அவர்கள் பரிதவிப்பில் உள்ளனர். 

பள்ளி கல்வித்துறையில், கடந்தாண்டு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், தையல், ஓவியம், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பாடங்களுக்கு, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. இதில், பின்னர், பல்வேறு காரணங்களால் 2,000 காலிப்பணியிடம் ஏற்பட்டது. இதை மீண்டும் நிரப்ப, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
இப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம், கடந்த ஜூனில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு நடந்தது. 5,000 பேர் கலந்துகொண்டனர். ஆனால், ஏழு மாதமாகியும், அவர்களுக்கு பணி நியமனம் உத்தரவு வழங்கப்படவில்லை.
நேர்முகத் தேர்வில் பங்கேற்ற லெட்சுமி கூறுகையில், "திருப்பூரில் தனியார் மில்லில் தையல் வேலை செய்து வந்தேன். அரசு ஆசிரியர் வேலை என்பதால் விண்ணப்பித்து, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டேன். மாதம் ஏழு கடந்து விட்டது. ஆனால், முடிவு தெரியவில்லை. இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கேட்டால், எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை, தெரியாது என்கின்றனர். இதை நம்பி, மில் வேலையையும் விட்டுவிட்டேன்" என்றார்.
கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த ஆசிரியர் பணிக்கு, தொகுப்பூதியம் வழங்க மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. அதேபோல், ஏற்னவே பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் மாற்று பணியிடம் கேட்பதால், இவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளது. இவர்களை, விரைவில் பணி நியமனம் செய்ய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்" என்றார்.

Popular Posts