போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு கல்வித்துறை "நோட்டீஸ்'

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், 6வது ஊதியக்குழுவில், மத்திய அரசு, இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கி உள்ள ஊதியத்தை, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கும், 2006, ஜன., 1ம் தேதி முதல், வழங்க வேண்டும்;


 பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆசிரியர் தகுதித் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உட்பட, ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஆசிரியர்கள், கடந்த, 25ம் தேதி, உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டம், 26ல், ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு எடுத்தனர். உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், நாமக்கல் மாவட்ட தலைவர், அண்ணாதுரை கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்ட, 62 ஆயிரம் ஆசிரியர்களிடம், அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம், விளக்கம் கோரப்பட்டுள்ளது; மாவட்டம் வாரியாக, கடந்த, 3ம் தேதி முதல், நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

நிர்வாக ரீதியாக, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை முறைப்படி எதிர்கொள்வோம். இவ்வாறு, அவர் கூறினார். இந்நிலையில், நாளை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அல்லாத, மற்ற ஆசிரியர் சங்கம் மற்றும் கூட்டணி சார்பில், வேலை நிறுத்த போராட்டம் நடக்க உள்ளது. நாளை, பள்ளிக்கு விடுப்பு விடப்பட்டதாக தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular Posts