தபால் மூலம் வாக்காளர் அட்டை: தேர்தல் கமிஷன் ஏற்பாடு


தபால் மூலம் அடையாள அட்டையை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ள, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில், 1993 முதல், போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியை, தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்தது; 2000ல், 100 சதவீதம் நிறைவு செய்து ஒருங்கிணைக்கப் பட்டது. புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் செய்யப்பட்டு, பட்டியல் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், "போட்டோவுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில், போட்டோக்களை புதியதாக மாற்றிக் கொள்ளலாம்' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதன்படி, புதிய வாக்காளர் அடையாள அட்டை மேம்படுத்தப்பட்டு, பி.வி.சி., (பிளாஸ்டிக் ) அடையாள அட்டைகள் வழங்க உத்தரவிட்டுள்ளது.

புதிய அடையாள அட்டை பெறுவதற்கான வழிகாட்டி முறைகளையும், தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதற்காக, ஓட்டுப்பதிவு மையம், பொது சேவை மையம், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் விண்ணப்பம் செய்யலாம். "டூப்ளிகேட்' அடையாள அட்டை பெறுவதற்கு, 25 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதை, விண்ணப்பம் செய்யும் இடங்களிலே பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புபவர்கள், விண்ணப்பத்துடன், சுய முகவரியிட்ட, ஸ்டாம்ப் ஒட்டிய கவர்களை வழங்க வேண்டும். புதிய அட்டை தயாரானதும், வாக்காளர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க, தேர்தல் பிரிவு தாசில்தார்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Popular Posts