பென்ஷனை நிறுத்தி வைக்க உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

"பென்ஷன் என்பது, ஒருவர், நீண்ட காலம் பணியாற்றியதற்காக கொடுக்கப்படும் நிதி; அது, அவரின் உரிமை. ஒருவர் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள், வழக்குகள் ஆகியவற்றை காரணமாக வைத்து, அவரின் பென்ஷனை நிறுத்தி வைக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட், உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர், ஜித்தேந்திர குமார் ஸ்ரீவத்சவா மீது, குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இதை காரணமாக வைத்து, அவருக்கான பென்ஷன் மற்றும் பணிக் கொடையை கொடுக்காமல், அம்மாநில அரசு நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்து, அவர், ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு செய்தார்.
 இதை விசாரித்த ஐகோர்ட், ஜித்தேந்திர குமாருக்கு, பென்ஷன் கொடுக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஜார்க்கண்ட் மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில், மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள், ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: பென்ஷன், பணிக்கொடை ஆகியவை, ஒரு ஊழியர், நீண்ட காலமாக, நேர்மையுடன் பணியாற்றியதற்காக கொடுக்கப்படும் நிதி. அது, அவரின் சொத்து போன்றது. 
 பென்ஷன் என்பது, ஊழியரின் உரிமை. அரசியலமைப்பு சட்ட பிரிவு, 31 (ஏ), இதை உறுதி செய்கிறது. எனவே, சம்பந்தபட்ட ஊழியர் மீதுள்ள வழக்குகள், துறை ரீதியான நடவடிக்கைகள் ஆகியவற்றை காரணமாக வைத்து, அவரின் பென்ஷனை நிறுத்தி வைக்க முடியாது. இது, அவரின் அடிப்படை உரிமையை மறுக்கும் செயல். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Popular Posts