பள்ளியின் தினசரி வருகை பதிவு "ஆன்லைன்' மூலம் பதிவேற்றம்

அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும், தினசரி வருகை பதிவுகளை, ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாக செயல்பாடு அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. 
அரசு உத்தரவு, விபரம் கேட்பு, சேமிக்கும் தகவல், விண்ணப்பித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும், தற்போது, ஆன்லைன் மூலமாகவே பரிமாறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டில், ஒவ்வொரு பள்ளியிலும், படிக்கும் மாணவ, மாணவியர், அங்குள்ள கட்டிட மற்றும் இட வசதி, உள்கட்டமைப்பு வசதி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பணி நடந்தது.
இதன் அடுத்த கட்டமாக, தற்போது பள்ளி துவங்கிய உடன் எடுக்கப்படும் தினசரி வருகை பதிவுகளையும், அன்று காலை, 10 மணிக்குள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளும், தங்களது தினசரி வருகை பதிவுகளை, ஆன்லைன் மூலம் பதிவு செய்கிறது. இதன் மூலம், தமிழகத்தின் எந்த மூளையில் இருந்தும், பள்ளியின் வருகையை வகுப்பு வாரியாக தெரிந்து கொள்ள முடியும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
வருகை பதிவேடுகளை நோட்டுகளில் மட்டும் பதிவு செய்யும் போது, தலைமை ஆசிரியர்களுக்கு தகுந்தது போல், பல மாற்றங்களும் இருக்கும். மாணவர் எண்ணிக்கை அதிகமாக கணக்கு காட்டுபவர்களும் உண்டு. அதே போல், வேண்டப்பட்ட ஆசிரியர்கள் தாமதமாக வந்தாலோ, வராமல் இருந்தும் அவர்களுக்கு வருகை பதிவு செய்வதும் நடந்ததுண்டு.
ஆனால், தற்போது, ஆன்லைன் மூலம் காலை, 10.30 மணிக்குள் வருகை பதிவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பின் திடீர் ஆய்வுக்கு அதிகாரிகள் வரும் பட்சத்தில், அதில் மாற்ற முடியாது என்பதால், மாட்டிக்கொள்ள நேரிடும். இதனால் முறைகேடு குறையும் . இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி: தினமலர்

Popular Posts