அரசு ஊழியர்களை அவமதிக்கும் அமைச்சரின் கருத்துக்கு கண்டனம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்இரா.தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் இரா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் நடைபெற்ற விவாதத்தின்போது “ அரசு ஊழியர்களுக்காக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுமா ” என்று சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம், “ அரசு ஊழியர்களுக்கு 6வது சம்பளக் கமிஷனில் வீட்டு வாடகைப்படி அதிகமாகக் கிடைக்கிறது.
அதனால் அவர்கள் தனியார் வாடகை வீடுகளில் சொகுசாகஇருக்கிறார்கள். அதனால் அவர்கள் அரசுக் குடியிருப்பை நாடுவதில்லை ” என பதில்அளித்துள்ளார்.
அரசு ஊழியர்களை இவ்வாறு அவமதித்துப் பேசிய அமைச்சரின் செயலைதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்கடுமையாக ஆட்சேபிப்பதோடு, கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.தமிழக வீட்டு வசதித் துறைஅமைச்சரின் கருத்து உண்மைக்குப் புறம்பானதாக உள்ளது. தமிழக அரசின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகைப்படி அதிகபட்சமாக நகராட்சிகளில் ரூ.1,400/-ம், மாநகராட்சிகளில் சென்னையில் ரூ.3,200/-ம்,மதுரை போன்ற மாநகராட்சிகளில் ரூ.1,800/-ம் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தரம் ஐஐஐ நிலையிலுள்ள நகராட்சிகளில் ரூ.1,000/-மும் இதர பகுதிகளில் இதற்கும் கீழாக ரூ.400/- மட்டும் வீட்டுவாடகைப்படி வழங்கப்படுகிறது.
ஆகவே 50 சதவீதத்திற்கும் மேலான அரசு ஊழியர்மற்றும் ஆசிரியர்கள் ரூ.1,400/-க்கு கீழாகவே வீட்டு வாடகைப்படி பெற்று வருகின்றனர் என்பதே உண்மையாகும்.இவ்வளவு குறைந்த வாடகையில் நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களில் கூட வீடுகிடைப்பதில்லை. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் குடியிருந்து வரும்அரசு ஊழியர்களிடம் அரசுவழங்கும் வீட்டு வாடகைப்படியோடு அக்குடியிருப்பின் தர நிலைக்கேற்ப கூடுதலாக ஒன்றரை சதவீதம் முதல் 4சதவீதம் வரை அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு நகரங்களின் தர நிலைக்கு ஏற்ப 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் சதவீத அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்க தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர்போன்றவற்றிலும், பேரூராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட 33 நகராட்சிகளிலும் பணிபுரியும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு உரிய வீட்டு வாடகைப்படி இதுவரை வழங்கப்படவில்லை.தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்தால் சமீப காலமாக புதிய வீடுகள் கட்டப்படுவதில்லை. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகளை வீட்டு வசதி வாரியம் பராமரிக்க மறுத்து வருவதோடு, அக்குடியிருப்புகளில் உள்ளவர்களை காலி செய்ய நிர்பந்தித்து வருகிறது.


மேற்படி வீடுகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் வீடுகள் இடிந்து விழுந்து உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் சம்பளத்தில் பெரும் பகுதியை வாடகையாகச் செலவிட்டு தனியார் வீடுகளுக்குச் செல்லவேண்டிய அவல நிலைக்குஅரசு ஊழியர்கள் ஆளாகியுள்ளனர்.எனவே, இத்தகைய அவலநிலையில் வாழ்ந்து வரும் அரசுஊழியர்களைப் பற்றி “சொகுசாக வாழ்ந்து வருகிறார்கள்” என்று பேசிய அமைச்சரின் கருத்துகளுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டனம் தெரிவிப்பதோடு, அக்கருத்து வாபஸ் பெறப்பட்டு அவைக் குறிப்பிலிருந்து நிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்

Popular Posts