ஆசிரியர் பணி: மன நிறைவா? மன உளைச்சலா?

மாறிவரும் கல்விச்சூழலில் தங்களது பணியில் எதிர்கொள்கிற சவால்கள், பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுகின்றனர் ஆசிரியர் தினம் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் தொடர்ச்சியாக மாறிவருகின்றன. கால மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களின் சிந்தனைப் போக்கிலும் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இப்படியான கல்விச்சூழலில், கல்வித்தேரை இழுத்துச் செல்லும் ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அவர்கள் சந்திக்கிற சவால்கள், பிரச்சினைகள் என்ன? 
ஆசான் என்கிற மகத்துவம் மிகுந்த பணியை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? இதுகுறித்து சில ஆசிரியர்களிடம் பேசினோம்... 
  கல்விச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களால் ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.   
"தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (Continuous and Comprehensive Evaluation) என்று புதிய முறை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறையில், மாணவர்களுக்கு யோகாசனம், பாட்டு, நன்னெறி உட்பட பல திறமைகளையும் கற்றுத்தர வேண்டும். நல்ல விஷயம்தான். நிச்சயம் வரவேற்கக்கூடியதுதான். ஆனால், அது பற்றிய பதிவேடுகளை ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் திடீர் திடீரென புள்ளிவிவரங்களைக் கேட்கின்றனர். பாடம் நடத்துவதைக் காட்டிலும், பதிவேடுகளைப் பராமரிப்பதுதான் ஆசிரியர் பணி என்றாகிவிட்டது. வாரத்தில் ஒரு நாள் பாடம் நடத்துவதே பெரிய விஷயம் என்ற நிலைதான் இப்போது உள்ளது" என்று ஆதங்கப்படுகிறார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் கண்ணன். 
கல்வித்துறையில் பல்வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, உரிய முறையில் திட்டமிட்டு செலவிடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்படுவதும் ஆசிரியர்கள்தான். எப்படி? "மாவட்டக் கல்வி அதிகாரியிடம் இருந்து எங்களுக்கு திடீரென எஸ்.எம்.எஸ். வரும். இன்று பிற்பகல் 3 மணிக்குள் பதிவேடுகளுடன் வரவேண்டும் என்று அதில் இருக்கும்.நான் ஒரு குக்கிராமப் பள்ளியில் பணியாற்றுகிறேன். 12 மணிக்கு கிளம்பினால்தான் 3 மணிக்குள் அங்கு போய்ச்சேர முடியும். மாதத்தில் பாதிநாள் இப்படி அலைந்து கொண்டிருந்தால் எப்படி என்னால் பள்ளியைக் கவனிக்க முடியும்?
அந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஒழுங்காகச் செலவிடாமல், அதை வருஷக் கடைசியில் எப்படியாவது செலவழித்தாக வேண்டும் என்ற நெருக்கடி அவர்களுக்கு. பிப்ரவரி, மார்ச் வந்து விட்டால் டிரெயினிங் டிரெயினிங் என்று எங்களை வாட்டி வதைக்கிறார்கள்" என்று புலம்புகிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர். கல்வி போதிப்பது மட்டுமே ஆசிரியர்களின் பணி. 
ஆனால் இப்போது கல்விக்கு சம்பந்தமில்லாத பொறுப்புகளும் ஆசிரியர்களின் தலையில் சுமத்தப் படுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. "சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. அந்த நிதியில் புதிதாக ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றால், அந்தக் கட்டுமானப் பணிக்கான முழுப்பொறுப்பும் தலைமையாசிரியர்தான். கட்டுமானப் பொருட்கள் வாங்குவது, பணிகளை மேற்பார்வையிடுவது, கணக்கு வழக்கு பார்ப்பது உட்பட எல்லா வேலைகளையும் தலைமையாசிரியர் செய்ய வேண்டும். அதுதவிர, கட்டிங் கொடு என்று அரசியல்வாதிகள்  வந்துவிடுகின்றனர். இதுபோன்ற சூழலில், தலைமை ஆசிரியரால் பள்ளிக்கூடத்தை எப்படி நிர்வகிக்க முடியும்? தேவையில்லாத மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது" என்று பொருமுகிறார், மதுரையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தலைமையாசிரியர் ஒருவர். சினிமா, தொலைக்காட்சியின் தவறான கலாச்சாரத் தாக்கத்திற்கு ஆளாகியிருக்கும் மாணவர்களை சமாளிப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. சமீபத்தில் வாடிப்பட்டி அருகே பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் இருந்த பெஞ்ச்சைத் திருடி விற்று, அதில் மது வாங்கிக்  குடித்தனர் என்று ஓர் செய்தி வெளியானது. வகுப்பறைகளில் அம்மாதிரியான மாணவர்களைக் கையாளுவது ஆசிரியர்களுக்குபெரிய சவால்தான். "இப்போது கேமரா செல்போன், பள்ளி மாணவர்களிடம் சர்வசாதாரணமாகப் புழங்குகிறது. அது அவர்களை மிகத் தவறான பாதையில் இழுத்துச் செல்கிறது. ஒழுக்கம், ஆசிரியர்களுக்கு கீழ்படிதல் போன்ற பண்புகள் பொதுவாக இன்றைக்கு மாணவர்களிடம் அருகிவிட்டன. ஆசிரியர்களின் அறிவுரைகளை அவர்கள் மதிப்பதில்லை. ஆனால், மாணவர்களைத் திட்டாதீர்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். இதுபோன்ற மாணவர்களை எப்படிச் சமாளிப்பது, அவர்களுக்கு எப்படிப் பாடம் சொல்லித் தருவது என்று எங்களுக்குப் புரியவேயில்லை" என்று வருத்தப்படுகிறார், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி தமிழாசிரியர் கல்யாணசுந்தரம். இவ்வளவு சவால்களுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்போடும், திறமையோடும் பணியாற்றி சிறந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிலரைத் தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்குகிறது நம் அரசு. ஆனால், நல்லாசிரியர் என்ற விருதுகளை எதிர்பாராமலேயே, எத்தனையோ ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு கல்விச் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது, அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஆசிரியர்கள் பலரின் சிறப்புகளை வெளியிட்டு நமது ‘புதிய தலைமுறை’யும் கௌரவித்து வருகிறது.

Popular Posts