உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க சில திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு:

சென்னை, ஆக.26: உண்மையான சமச்ச்சீர் கல்வி கிடைக்க அரசு சில திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.அதன்படி, 65 துவக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், 710 நடு நிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப் படுவதாகத் தெரிவித்தார். மேலும், 9735 பட்டதாரி ஆசிரியர்கள், 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த ஆண்டில் நிரப்பப் படவுள்ளதாகத் தெரிவித்தார். பள்ளிகளில் தொழிற்கல்வி, உடற்கல்வி உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 16549 பகுதி நேர ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிவித்தார். இதனால் 6,7,8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர். மேலும், பள்ளிகளில் கழிப்பறைகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள் என சீரமைப்பு மேற்கொள்வதற்கு, ரூ.1082.71 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார் முதல்வர்.நிலை உயர்த்தப்பட்ட மேல் நிலைப்பள்ளிகளில் 3187 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.எல்லா மாணவ மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் ஒரே மாதிரியாக அளிக்கப்படுவது போல், எல்லாருக்கும் ஒரே மாதிரியாக புத்தகப் பைகள் கொடுக்கப்படவுள்ளன. கணக்கு உபகரணப் பெட்டி (ஜியாமெண்ட்ரி பாக்ஸ்), வண்ண பென்சில்கள், புவியியல் வரைபடம் ஆகியவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.மேலும், ஆசிரியர் அல்லாத பணியிடங்களாக, துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட 5000 பணியிடங்கள் புதிதாக நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.ஒரே வருடத்தில் புத்தகத்தை மூன்று பருவங்களுக்கு மூன்று தொகுப்பாகப் பிரித்து, முப்பருவ முறை கொண்டுவரப்படும் என்றார் முதல்வர். இதன்மூலம் பள்ளிக் குழந்தைகள் புத்தகச் சுமையைக் குறைக்க முடியும் என்றும், எளிதாகக் கையாள இயலும் என்றும் தெரிவித்தார்.பத்து, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் பட்டியல், இனி, மாணவர்களின் புகைப்படம் ஒட்டப்பட்டு, தொழில்நுட்பம் சார் ரகசியக் குறியீடு இருக்கும் வகையில் வழங்கப்படவுள்ளது.மாணவர்களின் சிந்தனைத் திறனை ஊக்குவிக்க 7 முதல் 15 வயது வரையுள்ள மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார் முதல்வர்.அரசு தொடக்க மற்றும் உயர்நிலை, நடுநிலை, மேல்நிலைப் பள்ளி வகுப்பு கற்றல் கற்பித்தலை மேம்படுத்த, தகவல் தொழில்நுட்ப திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது, பள்ளி ஆசிரியர்களுக்கான திட்டமாக செயல்படுத்தப்படும். இதன்மூலம் ஆசிரியர்களுக்கான தனிப் பயிற்சி திட்டம் உருவாக்கப்படும்.அனைத்து மாணவர்களுக்கும் தரமான கணினி மூலமான நவீனக் கல்வி கிடைக்க, செயற்கைக் கோள் மூலம் பாடங்களைப் பார்க்க வசதி ஏற்படுத்தப்படும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.




Popular Posts