அவசரப்பட்டு விட்டாரா முதல்வர்? இடியாப்ப சிக்கலில் டி.ஆர்.பி.,

"ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் தான் ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்" என ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) வட்டாரம் தெரிவித்தது.

டி.இ.டி., தொடர்பான, அரசின் அறிவிப்புகள் அனைத்தும் மாறி மாறி வருவதால், இந்த விவகாரத்தில் முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும், தங்களை அரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதியவர்களின் கேள்விக் கணைகளைச் சமாளிக்க முடியாமல், டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது.

கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 27 ஆயிரம் பேரும், சமீபத்தில், முதல்வர் அறிவித்த, 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக, 47 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆயிரம் இடங்கள் மட்டுமே காலியாக உள்ள நிலையில் 74 ஆயிரம் பேர், தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது. ஏனெனில் தேர்ச்சி பெற்ற அனைவரும், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். 

தற்போதுள்ள காலி இடங்களுக்கு, தேர்வு பெறுவோர் போக மீதம் உள்ளவர்களுக்கு அடுத்த பணி நியமனத்தின் போது முன்னுரிமை கிடைக்கும் என, தேர்வர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால், இதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்கு டி.ஆர்.பி., முன்வரவில்லை.

எனினும் இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: கடந்த, 2013 தேர்வில் தேர்ச்சி பெற்றோர், 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக தேர்ச்சி பெற்றோர் ஆகிய இரு தரப்பினரின் மதிப்பெண்களையும் மதிப்பீடு செய்து இடஒதுக்கீடு வாரியாக அதிக ம திப்பெண் பெற்ற விண்ணப்பதாரர் மட்டுமே ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு பெறாதவர்கள், அடுத்த காலி பணியிடங்களை நிரப்பும் போது முன்னுரிமை கோர முடியாது. அடுத்து, மீண்டும் டி.இ.டி., தேர்வு நடந்தால், அதில் தேர்ச்சி பெறுபவரின் மதிப்பெண் மற்றும் ஏற்கனவே, 2013ல் தேர்ச்சி பெற்று அரசு பணி கிடைக்காமல் காத்திருக்கும் விண்ணப்பதாரருடைய மதிப்பெண் ஆகிய இரண்டையும் கலந்து அதில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரரே, அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

Popular Posts