புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்று (12.12.12) ஸ்டிரைக் : தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் பங்கேற்பு

ஏழாவது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் மத்திய அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கின. கிராமப்புற தபால் சேவைகள் நிறுத்தப்பட்டன.


மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷனை உடனே அமைக்க வேண்டும். 50 சதவீத பஞ்சப்படியை சம்பளத்துடன் இணைத்து ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும். கிராம அஞ்சலகங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 75 ஆயிரம் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கருணை அடிப்படையிலான வேலையை எந்த நிபந்தனையும் இன்றி வழங்க வேண்டும். அரசு வேலையை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்று ஒருநாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. தபால்துறையின் அனைத்து பிரிவு ஊழியர்கள், வருமான வரி, கணக்கு தணிக்கை துறை, கல்பாக்கம் அணுமின் நிலையம், தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ, சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், ராஜ்பவன், சாஸ்திரி பவனில் உள்ள 45க்கும் அதிகமான அரசு அலுவலக ஊழியர்கள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 12.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
தபால் துறையில் முக்கிய தொழிற்சங்கமான அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் (என்எப்பிஈ) போராட்டத்தில் பங்கேற்றுள்ளது. இந்த சங்கத்தின் கீழ் 60 சதவீத ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதனால் தமிழகம் முழுவதும் தபால் துறை அலுவலகங்களில் சுமார் 50 சதவீத ஊழியர்கள் வேலைக்கு வராததால் தபால் நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. கிராமப்புறங்களில் தபால் சேவை இன்று நிறுத்தப்பட்டது. தபால் ஆபீஸ்களில் கவுன்டர்களில் ஆள் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள வருமான வரித்துறை, ஆயத்தீர்வை அலுவலங்களில் ஊழியர்கள், அலுவலர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் பணிகள் முழுமையாக பாதித்துள்ளது. அண்ணாசாலையில் உள்ள கணக்கு தணிக்கை துறை அலுவலகம், நுங்கம்பாக்கம், பெசன்ட் நகரில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் திறந்திருந்தாலும் ஊழியர்கள் வேலைக்கு வராததால் வழக்கமான பணிகள் நடக்கவில்லை. 

இதே கோரிக்கைகளுக்காக ரயில்வே மற்றும் பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்களும் போராடி வருகின்றன. ஆனால், அந்த சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. ரயில்வே, பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினர் இன்று உணவு இடைவேளையின்போது தங்கள் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டம் குறித்து மத்திய அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘இது ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்தான். இதற்கு பிறகும் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றால் பிப்ரவரியில் ஊழியர் சங்க பிரதிநிதிகள் டெல்லியில் ஒன்று கூடி காலவரையற்ற போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளன’’ என்றார்.

Popular Posts