முப்பருவ கல்விமுறை பயிற்சி: ஆப்சென்ட் ஆசிரியர் விவரம் சேகரிப்பு


    முப்பருவக் கல்வி முறை பயிற்சி வகுப்புகளில், "ஆப்சென்ட்" ஆன ஆசிரியர்கள் குறித்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள், விவரம் சேகரித்து வருகின்றனர். இதனால், "ஆப்சென்ட்" ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
    தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, நடப்பு கல்வியாண்டில் முப்பருவக் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இது தொடர்பாக, கற்றலின் தொடர் மதிப்பீட்டுப் பயிற்சி வகுப்புகள், ஆசிரியர்களுக்கு, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பல கட்டங்களாக நடத்தப்படுகின்றன.
     கடந்த வாரம் (ஜூலை 23) சனிக்கிழமை குறுவள மையம் அளவில், 6, 7, 8ம் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கு நடந்த பயிற்சி வகுப்பில், மாநிலம் முழுவதும் உள்ள, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பலர் "ஆப்சென்ட்" ஆகினர். இதனால், அதிர்ச்சியுற்ற எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள், "ஆப்சென்ட்" தகவலை, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
  பயிற்சி வகுப்பில் பங்கேற்காத ஆசிரியர்கள், முப்பருவக் கல்வி முறையை, மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் கற்பிக்க முடியும்? "ஆப்சென்ட்" ஆனவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

     இதுகுறித்து, மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் முகமது அஸ்லம், முப்பருவக் கல்வி முறையில், கற்றலில் தொடர் மதிப்பீட்டுப் பயிற்சி வகுப்பு, மாநில அளவில் நடக்கின்றன. இதில், ஆசிரியர்கள் பலர், "ஆப்சென்ட்" ஆகியுள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்கப்படும். பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மற்றும் "ஆப்சென்ட்" ஆசிரியர்கள் விவரங்கள் சேகரித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Popular Posts