ஓய்வுபெற்ற பிறகும் ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெறலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓய்வுபெற்ற பிறகும் ஊக்க ஊதியம் பெற ஆசிரியர்களுக்கு உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
 
 ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளித்தாளாளர் மற்றும் செயலர் என்.பாலசெüந்தரி. அதே பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். எம்.ஏ.,எம்.எட்., படித்ததற்காக 3வது ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தார். இந்த கோரிக்கையை பள்ளிக் கல்வித் துறை நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, பாலசெüந்தரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அவருக்கு 3ஆவது ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் மற்றும் பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். மனுவில், பணிக் காலத்தின்போது ஊக்க ஊதியம் கோரி ஆசிரியை விண்ணப்பிக்கவில்லை. ஏற்கெனவே அவருக்கு அதிகபட்ச ஊக்க ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. எனவே 3ஆவது ஊக்க ஊதியம் பெறத் தகுதியில்லை எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இம் மனுவை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர்களின் தகுதியை உயர்த்துவதற்காகவே அரசு ஊக்க ஊதியம் வழங்குகிறது. ஆசிரியர்கள் எந்த அளவுக்கு தங்கள் தகுதியை உயர்த்தி உள்ளார்களோ, அதற்குத் தகுந்த ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். இந்த சலுகையைப் பெற பணிக் காலத்தில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல. எனவே, ஆசிரியை ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் ஊக்க ஊதியம் பெற உரிமை உள்ளது. அவருக்கு 8 வார காலத்தில் உரிய பணப் பலன்களை வழங்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Popular Posts