நலத்துறை பள்ளிகளில் தேர்ச்சி குறைவு: தலைமை ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு

ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறையும் பட்சத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் என அரசுச் செயலர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் கண்ணகி பாக்கியநாதன் கடலூரில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்டத்தில் அனைத்துத் துறைகளில் ஆதிதிராவிடர்களுக்கான திட்ட செயல்பாடு, பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறித்து ஆய்வு செய்தார்.

 அப்போது மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் 45 சதவீதம் குறைவான தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளது குறித்து கவலை தெரிவித்தார்.

பின்னர் நடந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் அவர் பேசியது, "மாவட்டத்தில் இதுபோன்று கல்வி தரத்தில் பின்தங்கிய நிலை கவலை அளிக்கிறது.  தேர்ச்சி சதவீதம் குறையும் நிலையில் இனி 50 வயது கடந்த தலைமை ஆசிரியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது நிறுத்தப்படும். தோல்வியுற்ற மாணவர்களுக்கு நடத்தப்படும் உடனடி தேர்வில் அனைவரும் தேர்ச்சிப் பெற கல்வித் துறையினர் முழு கவனத்துடன் பணியாற்ற வேண்டும்' என்றார்.
சார் ஆட்சியர் ரா.லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Popular Posts