தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் அவர்களின் சுற்றறிக்கை

பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.


🌟தொடக்கக்கல்வித்துறையில் கடந்த 2017 மே மாதம் நடைபெற்ற பொதுமாறுதல் கலந்தாய்வுக்குப் பின்பு ஏற்பட்டுள்ள ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2017 தேர்ந்தோர் பட்டியலின் படி இரண்டாம் கட்ட பதவி உயர்வுக் கலந்தாய்வு 19.03.2018 அன்று நடைபெறும் என்று தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  ந.க.எண்.009464/ டி1/ 2017 நாள்: 15.03.2018 ன் படி அறிவிக்கப்பட்டது.


🌟ஆனால் செயல்முறை ஆணை வெளியான மறுநாளே எவ்விதக் காரணமுமின்றி மேற்படி கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியானது, இது தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 01.01.2017 தேர்ந்தோர் பட்டியலின்படி பதவி உயர்வு வழக்கிட வேண்டுமெனில் 31.03.2018 க்குள் இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்திட வேண்டும். பதவி உயர்வு கலந்தாய்வு தாமதமானதற்கு தொடக்கக்கல்வித்துறையே முழுக்க முழுக்க பொறுப்பாகும். இதனால் தகுதியுள்ள ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுவது என்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.


🌟இது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரிடம் நமது இயக்கத்தின் சார்பில் இன்று (22.03.2018) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வலியுறுத்தப்பட்டுள்ளது.


🌟எனவே, தொடக்கக்கல்வித்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்தக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 27.03.2018 செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்கள் முன்பு வட்டார அளவில் ஆர்பாட்டம் நடத்திட மாநில மையம் முடிவெடுத்துள்ளது.


🌟நீதியை நிலைநாட்டிட, நியாயத்தைப் பெற்றிட நடைபெறும் இப்போராட்டத்தைப் பேரெழுச்சியுடனும், நமது இயக்கத்திற்கேயுரிய இலக்கணத்தோடும் நடத்திட அனைத்து வட்டார,  நகரக்கிளைகளையும் மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.


⚡தோழமையுடன்;                      

ச.மயில்,

பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

Popular Posts