அரசு ஊழியர்களின் கேள்விகளுக்கு அரசு துறைகள் மவுனம்: பிடிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.2,300 கோடி எங்கே?

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி விவரம், நிதித்துறை மற்றும் தகவல் தொகுப்பு மையத்தில் இல்லாததால், இந்த திட்டத்தின் நிலை குறித்து, அரசு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில், கடந்த ஆண்டு வரை, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம், 2,300 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் எங்கே என்பது தான், இப்போதைய கேள்வி.
தமிழகத்தில், 2003 ஏப்ரல் முதல், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகமானது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுஉள்ளனர்.

இத்திட்டத்தில், அடிப்படை ஊதியம், தர ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில், மாதம், 10 சதவீதம் பிடிக்கப்படும். அதே அளவு தொகையை, அரசும் தன் பங்காக செலுத்தும். 
40 சதவீத முதலீடுபின், ஊழியர் ஓய்வுபெறும் போது, மொத்தத் தொகையில், 60 சதவீதம் வழங்கப்படும். மீதமுள்ள, 40 சதவீதம், பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கடந்த, 12 ஆண்டுகளில் ஓய்வு பெற்றுள்ளனர். பலர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்; சிலர் மரணமடைந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு, பிடிக்கப்பட்ட நிதி எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரும், ஆசிரியருமான பிரெட்ரிக் ஏங்கல்ஸ், தமிழக நிதித்துறை, தகவல் தொகுப்பு மையம் மற்றும் கணக்கு மற்றும் கருவூலத் துறைக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தகவல் கேட்டுள்ளார்.
இதில், 'தங்களிடம் எந்த விவரமும் இல்லை' என, நிதித்துறை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில், கடந்த ஆண்டு வரை, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம், 2,300 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக, மாநில தகவல் தொகுப்பு மையம் தெரிவித்துள்ளது. 
அதேநேரம், ஓய்வு பெற்றவர், இறந்தவர் போன்ற விவரங்களோ, அவர்களுக்கான நிதி விவரமோ, தங்களுக்கு தெரியாது என, நிதித்துறை, தகவல் தொகுப்பு மையம், கணக்கு மற்றும் கருவூலத்துறை ஆகியவை தெரிவித்துள்ளன.தெளிவான முடிவு இல்லை.இதற்கிடையில், 'தமிழக அரசின் நிதி, மத்திய அரசின் திட்டத்திலும் இந்த பணம் முதலீடு செய்யப்படவில்லை' என, மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் குழப்பத்தில் உள்ளனர். 
இதுகுறித்து, பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட நிதியை பயன்படுத்துவது குறித்து, அரசு இன்னும் தெளிவான முடிவு எடுக்கவில்லை. அதனால், அந்த நிதியை வெளியில் முதலீடு செய்யவில்லை. இதுகுறித்து அரசு உரிய முடிவு எடுக்காததால், அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Popular Posts