பூட்டை உடைத்து, பொருட்களை எடுத்து சத்துணவு சமையல்: போராட்டத்தை முறியடிக்க அரசு தீவிரம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினரின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க, அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், நேற்று முதல், காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளது. இப்போராட்டத்தை சமாளிக்க, அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. 
 
 
வெளி ஆட்களைக் கொண்டு, சத்துணவு சமைத்து, மாணவ, மாணவியருக்கு வழங்க ஏற்பாடு செய்யும்படி, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர்கள் சமையலர்களை ஏற்பாடு செய்தனர். சமையல் செய்ய வந்தவர்களுக்கு, 185 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில், சத்துணவு ஊழியர்கள், உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையை பூட்டி, சாவியை எடுத்து சென்று விட்டனர். எனவே, பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்கள் எடுக்கப்பட்டன.


இதுகுறித்து, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், முன்னாள் பொதுச் செயலர் மேகநாதன் கூறியதாவது: கடைநிலை அரசு ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை வழங்க வேண்டும். கடும் புகையில் வாடி, ஓய்வு பெறும்போது, குறிப்பிட்ட தொகை, ஓய்வூதியம் வழங்கினால், மேற்கொண்டு வாழ எளிதாக இருக்கும் என, அரசை வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கைகளை பரிசீலிக்கவே, அரசு தயங்குகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
 
 
'போராட்டம் தேவையற்றது':
அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சத்துணவு திட்டத்தின் கீழ், முதல் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள, 54.63 லட்சம் குழந்தைகளுக்கு, 42,619 சத்துணவு மையங்கள் மூலம், கலவை சாதம் வழங்கப்படுகிறது. இதற்கென, 1.28 லட்சம் பணியாளர், சிறப்பு காலமுறை ஊதியம் அடிப்படையில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு அரசு பல சலுகைகளை அளித்து வருகிறது. இத்திட்டத்திற்காக, கடந்த நிதியாண்டில், 1,412.88 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஒரு சத்துணவு ஊழியர் சங்கம், நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை துவக்கி உள்ளது. இதுகுறித்து, கலெக்டர் மற்றும் இதர அலுவலர்கள் மூலம், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்டங்களில் உள்ள, அனைத்து சத்துணவு மையங்களும், நேற்று திறக்கப்பட்டு, சத்துணவு சமைக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்துள்ள நிலையில், மற்ற வகுப்பு குழந்தைகளுக்கு, ருசியான கலவை சாதம் வழங்கப்பட்டது. குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்பட்ட, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் போராட்டம் தேவையற்றது. இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular Posts