ஏப்ரல் 15 முதல் வேலைநிறுத்தம்: சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

ஏப்ரல் 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. சங்க மாநில செயலாளர் பேயத்தேவன் கூறியதாவது: உணவு சமைப்பதற்கான முன் மானியம் வழங்குவதில் கால தாமதம் செய்வதால் கடன் வாங்கி உணவு சமைக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை ஒரு குழந்தைக்கு ரூ. 1.70 பைசா என்றும்,

6 முதல் 10 வகுப்பு வரை ரூ. 1.80 பைசாவும் வழங்குகின்றனர். பருப்பு சமைக்கும் நாட்களில் ரூ. 1.30, 1.40 என்று அனுமதிக்கப்படுகிறது. இதனை ரூ. 5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 3 கிராம் எண்ணெய் என்பதை 7 கிராமாக உயர்த்த வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் வழங்கப்படும் உருளைக்கிழங்கு ஒரு குழந்தைக்கு 16 பைசா அனுமதிக்கப்படுகிறது. 100 குழந்தைகளுக்கு ரூ. 16 வழங்கப்படுகிறது. அப்படியென்றால்ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.8 க்கு வாங்க வேண்டும். இது நடைமுறை சாத்தியமில்லாதது. ஒரு மாணவனுக்கு 60 பைசா உயர்த்த வேண்டும். தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இவற்றை நிரப்பவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், மறியல், அமைச்சர் சந்திப்பு என எல்லாம் செய்து பார்த்தும் பலனில்லை. ஏப்ரல் 4 ல் சென்னையில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்கிறது. அதன் பிறகு ஏப்ரல் 15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

Popular Posts